தாலி சென்டிமெண்ட், தாய் சென்டிமென்ட் மத்தியில் இப்போது டிவி சீரியல்களில் கர்ப்ப சென்டிமென்ட், குழந்தைகள் சென்டிமெண்ட் பக்கம் திரும்பியுள்ளன டிவி சீரியல்கள். கருக்கலைப்பு எபிசோடுகளாக போய்க் கொண்டிருந்த டிவி சீரியல்கள் 2016ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஒரே கண்ணீராக இருக்கிறது.
சன்டிவியில் காலையில் தொடங்கி இரவு வரை இப்போது கண்ணீராகவே இருக்கிறது. யாராவது யாருடைய குடும்பத்தை கெடுப்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க பிறரின் துக்கம் எங்களுக்கு சந்தோஷம் என்பது போலவே பேசிக்கொண்டிருக்கின்றனர் வில்லிகள். தனக்கு ஒரு கண் போனதைப் பற்றி கவலைப்படாத வில்லிகளோ, பிறருக்கு இரண்டு கண் போகவேண்டும் என்று திட்டமிடுபவர்கள்தான் இப்போது சீரியலில் பிரபலமாகிவருகிறது.
கடந்த மாதங்களில் கருக்கலைப்பு பற்றியே ஒளிபரப்பாகிவந்த டிவி சீரியல் எபிசோடுகள் இப்போது என்னவோ சீரியல் நாயகிகள் கர்ப்பமாவது எப்படி ஐடியா கேட்கின்றன. யாராவது நல்லா ஐடியாவாக இருந்தால் சீரியல் இயக்குநர்களுக்கு சொன்னால்தான் உண்டு.
பிரியமானவள் அவந்திகா
சன்டிவியில் பிரியமானவள் தொடரின் நாயகி அவந்திகா, அழகுக்கு ஆசைப்பட்டு தோழியின் பேச்சை கேட்டு கருவை கலைத்துவிட, அதுவே இப்போது சிக்கலாகி வருகிறது. கணவர் வீட்டாரிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறாள் அவந்திகா.
ஐடியா சொன்ன கவிதா
அவந்திகாவின் நிலை, ஓரகத்தி கவிதாவிற்கு தெரியவர, அவளை காப்பாற்றும் வகையில் ஐடியா சொல்கிறாள். அதாவது கருக்கலைப்பு செய்த விவகாரம் வீட்டிற்கு தெரியும் முன்பாக மீண்டும் கர்ப்பமாகவேண்டும் என்பதுதான்.
என்ன செய்வது?
கிடைத்த பிள்ளையை தொலைத்துவிட்டு மீண்டும் கர்ப்பமாக தவியாய் தவிக்கிறாள் அவந்திகா. அதற்காக செய்யும் பிரயத்தனங்கள், அடடா தாங்க முடியலைடா சாமி.
சத்யா – பிரகாஷ்
அதே சன் டிவியில் இரவில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில், தாசில்தார் சத்யாவை அவளது கணவன் பிரகாஷ் திட்டி தீர்க்கிறான். இருவருக்கும் இடையேயான சண்டையை, தன் அம்மாவிடம் சொல்கிறாள் சத்யா.
சண்டையா இருக்கிறப்ப எப்படி?
சத்யாவை நெருங்க விடாத பிரகாஷ், கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் சத்யா… இப்படி இருக்கையில் எப்படி சத்யா கர்ப்பமாக முடியும்? டிவி சீரியல்களை பார்க்க பார்க்க நமக்குத்தான் தலைவலி அதிகமாகிறது. நேயர்களே நீங்கதான் டிவி சீரியல் இயக்குநர்களுக்கு நல்ல ஐடியாவை கொடுங்களேன்.