‘பசங்க-2’, ‘கதகளி’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, எனது அடுத்த படமான ‘இது நம்ம ஆளு’ பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும்.
தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் வேறு எடுக்க வேண்டியது உள்ளது. அதையெல்லாம் முடித்துவிட்டு விரைவில் வெளியாகிவிடும்.
‘இது நம்ம ஆளு’ படத்தின் புரோமோஷனுக்கு சிம்புவும், நயன்தாராவும் கண்டிப்பாக கலந்துகொள்வார்கள். ஏற்கெனவே, நயன்தாரா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் ஒதுக்கியிருந்தார். நாங்கள்தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். இருப்பினும் புரோமோஷனுக்கு கண்டிப்பாக வருவார் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணவேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் எகிறி விட்டது. எனவே, அவரை வைத்து படம் எடுப்பது சிரமம் என்றார்.