ஃபேஸ்புக் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஃப்ரீ பேஸிக்ஸ் இன்டர்நெட் திட்டம் குறித்து, அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான “ட்ராய்” கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தை ஆதரிக்குமாறு கருத்துக் கணிப்புகளை மேற்கொள்வது, பெரும்பான்மைக் கருத்தை மிக முரட்டுத்தனமாக திரட்டுவது என ட்ராய் கூறியுள்ளது.
இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக்குடன் இணைந்து இந்தியாவில் வழங்குவதை நிறுத்துமாறு முன்னதாக ட்ராய் கூறியிருந்தது.
இந்த ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தின்படி, ஃபேஸ்புக் உள்ளிட்ட சில வலைதளங்களை இன்டர்நெட் கட்டணமின்றி நுகர்வோர் அணுகமுடியும்.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ட்ராய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அர்த்தமுள்ள கலந்தாலோசனை நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, முரட்டுத்தனமான பெரும்பான்மைவாத, தூண்டிவிடப்பட்ட கருத்துக் கணிப்பாக மாற்றியிருப்பதாக ஃபேஸ்புக் மீது ட்ராய் குற்றம்சாட்டியுள்ளது.
இது இந்தியாவின் கொள்கை வகுப்பில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ட்ராய் கூறியுள்ளது.
ஃப்ரி பேஸிக்ஸ் திட்டம் குறித்து ட்ராய் எழுப்பிய கேள்விகளுக்கு ஃபேஸ்புக் பதிலளிக்கவில்லையென்றும் இதனால், இது தொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கேற்பவர்களால் எல்லாவற்றையும் அறிந்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகிறது என்றும் ட்ராய் கூறியுள்ளது.
ட்ராயுடன் இணைந்து செயல்படவே தாங்கள் முயற்சித்ததாக பஸ்ஃபீட் நியூஸ் நிறுவனத்திடம் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த ஃபேஸ்புக்கின் சிஇஓவான மார்க் ஸூக்கெர்பெர்க் கடுமையாக முயற்சிசெய்துவருகிறார்.
ஆனால், இது இந்தியாவில் இணைய சமநிலையைப் பாதிக்கும் என்ற அச்சம் விமர்சகர்களால் முன்வக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில் இணைய சேவையை வழங்குபவர்கள், சில தளங்களை மட்டும் இலவசமாக அளித்து, அவற்றுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என கூறப்பட்டுவருகிறது.