சர்வதேச சந்தையில் உச்சத்தில் இருந்த கச்சா எண்ணை விலை கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அமெரிக்கா முக்கிய காரணமாக திகழ்கிறது.
அங்கு கச்சா எண்ணை உற்பத்தி அதிகரிப்பு, அதி நவீன தொழில் நுட்பம் மூலம் ஷேல் கியாஸ் தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரபு நாடுகளில் இருந்து எண்ணை இறக்குமதி குறைக்கப்பட்டது.
மேலும், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் எண்ணை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பேரல் 150 டாலர் முதல் 200 டாலர் வரை விற்ற கச்சா எண்ணை தற்போது பேரல் ஒன்றுக்கு வெறும் 30 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகிறது. அதனால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்போது அங்கு சில்லறையில் ஒரு லிட்டர் தலா ரூ.26–க்கு விற்கப்படுகிறது. அது இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் அங்கு ஒரு கேலன் (3.78 லிட்டர்) பெட்ரோல் 67 ரூபாய் அளவுக்கு சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது லிட்டர் ரூ.20–க்கும் குறைவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் பீர் மற்றும் தண்ணீர் பாட்டில், பால், ஆரஞ்ச் ஜூஸ் உள்ளிட்டவைகளை விட பெட்ரோல் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இது கடந்த 1990–ம் ஆண்டுகளில் விற்ற விலையாகும்.
சமீபத்தில் ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மலர்ந்துள்ளது. மேலும் ஈரான் கூடுதலாக கச்சா எண்ணை உற்பத்தி செய்ய முடிவுசெய்துள்ளது. அதனால் பேரல் 25 டாலராக குறையும் வாய்ப்பு உள்ளது.