நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோல வேறுசில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடல் விவகாரத்தில் சென்னை மற்றும் கோவை போலீஸ் நிலையங்களில் சிம்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்த இசையமைப்பாளர் அனிருத் நாடு திரும்பினார். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகி 2 பக்க விளக்க கடிதத்தை கொடுத்தார்.
இதற்கிடையில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாச பீப் பாடல்களை வெளியிட்ட நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 12-ந் திகதி நடந்தது. அப்போது மனு தாக்கல் செய்த இளங்கோவன் மற்றும் அவருடைய நண்பர் சிவாஜி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் மாஜிஸ்திரேட்டு விளக்கம் பெற்று பதிவு செய்தார். பின்னர் வழக்கை 19-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை வருகிற மார்ச் மாதம் 21-ந் திகதி நேரில் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.