ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட மரத் தவளை ஒன்று இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தவளையை வட கிழக்கு இந்தியக் காடுகளில் இந்திய உயிரியல் விஞ்ஞானியான சத்தியபாமா தாஸ் பிஜுவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.
1870ல் பிரிட்டிஷ் விலங்கியலாளரான தாமஸ் ஜெர்தோன் இந்த வகைத் தவளை ஒன்றை கண்டறிந்தார். இதனால், இந்தத் தவளைக்கு பாலிபிடேட்ஸ் ஜெர்தோனி என்று பெயர் சூட்டப்பட்டது.
தற்போது இந்தத் தவளைகள், சீனா முதல் தாய்லாந்து வரையிலான பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இருந்தபோதும், இந்தத் தவளைகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டதில், இவற்றை புதிய இனமாகவே வரையறுக்கலாம் என தெரியவந்துள்ளது.
தரையிலிருந்து சுமார் 6 மீட்டர் உயர்த்திற்கு மேல் அமைந்திருக்கும் மரத் துளைகளில் இந்த மிகச் சிறிய தவளைகள் வசிக்கின்றன.
இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளாக அவை கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளன.
இந்தப் பகுதியில் மிகக் குறைவான விஞ்ஞானிகளே ஆராய்ச்சி செய்வதால் இவை கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என வேறு சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தத் தவளைகள் இவ்வளவு உயரத்தில் வசிப்பது மட்டும் விசித்திரமானதல்ல; இந்த இனத்தில் பெண் தவளைகள் தாங்கள் வசிக்கும் மரப் பொந்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் முட்டைகளை இடுகின்றன.
அவற்றிலிருந்து தலைப்பிரட்டைகள் எனப்படும் தவளைக் குஞ்சுகள் வெளியான பின், பொரிக்காத முட்டைகளை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கின்றன.
பிற தவளைகளைப் போலில்லாமல், இந்தத் தவளைகள் பெரிதாக வளர்ந்த பிறகும் பூச்சி, புழுக்களை உண்பதில்லை. பதிலாக தாவரங்களையே உணவாகக் கொள்கின்றன.
இந்தத் தவளைகள், 2007ஆம் ஆண்டில், வேறு மிருகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது யதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் பிஜு, இந்தியாவில் வசிக்கும் சுமார் 350 தவளை இனங்களில் 89 தவளை இனங்களைக் கண்டுபிடித்தவர்.
இதனால், இந்தியாவின் தவளை மனிதன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
டிஎன்ஏ ஆய்வின் மூலம் இந்தத் தவளைகள் புதிய பிரிவைச் சேர்ந்தவை என பேராசிரியர் பிஜுவும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர். ஆகையால் இதற்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் பேராசிரியர் பிஜு படிக்கும்போது அவருக்கு வழிகாட்டியாக இருந்த ஃப்ராங்கி போஸித்தின் பெயரைச் சேர்த்து, இந்தத் தவளைக்கு ஃப்ராங்கிஸாலஸ் ஜெர்தோனி என பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது.
தவளைகள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது என பிஜு கூறுகிறார் .
விவசாயத்திற்காகவும் குடியிருப்புகளுக்காகவும் வெப்ப மண்டலக் காடுகள் பெருமளவில் அளிக்கப்படுவதால், அவற்றின் வாழிடம் பாதிக்கப்பட்டிருப்பதாகச் அவர் சொல்கிறார்.