தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டலா பகுதியில் வசிக்கும் ஜூனியர் கல்லூரி மாணவியான ரேகா, நேற்று இரவு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்ததாகவும், வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
விவசாய கூலித் தொழிலாளர்களான அவரது பெற்றோரால் வீட்டில் கழிப்பறை கட்டிக்கொடுக்க முடியவில்லை. எனவே, ரேகா தனியாக செல்லும் போது யாராவது அவரை தொந்தரவு செய்து, அதன்காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.