இளநீரை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆனால் எப்பேற்பட்ட வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக பருகினால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இளநீர் மட்டும் விதிவிலக்கல்ல. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பக்க விளைவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.
கலோரிகள் அதிகம்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைப்பவராயின், இளநீரை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இளநீரில் கலோரிகள் ஏராளமாக உள்ளது. அதிலும் 100 கிராம் இளநீரில் 17.4 கலோரிகள் உள்ளது. ஆரோக்கிய பானம் என்று இதனை அதிகம் குடித்தால், உடல் எடை குறைவதில் சிரமம் ஏற்படும். எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த பானம் அல்ல.
சர்க்கரை நோய்
இளநீரில் சர்க்கரை குறைவாக இருந்தாலும், இதில் கலோரிகளும், கார்போஹைட்ரேட்களும் உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் பருகக் கூடாது. இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம்
என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆம், இளநீரில் சோடியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இதனை அதிகம் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், அது நிலைமையை மோசமாக்கும்.
உடல் வறட்சி
இளநீரை அளவாக குடித்தால், உடலில் நீர்ச்சத்து தக்க வைக்கப்படும். அதுவே அதிகமாக குடித்தால், அதில் உள்ள சிறுநீர்ப் பெருக்கி பண்புகளால், பல முறை சிறுநீர் கழிக்க நேரிட்டு, உடல் வறட்சியை சந்திக்கக்கூடும்.
குளிர்ச்சியான உடலுக்கு நல்லதல்ல
இளநீர் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதை ஏற்கனவே குளிர்ச்சியான உடலைக் கொண்டவர்கள் அதிகம் குடித்தால், சளி, இருமலால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
வயிற்றுப்போக்கு
இளநீர் ஓர் இயற்கையான மளமிலக்கி. இதனை அளவாக குடித்தால், நன்மையைப் பெறலாம். அதுவே அதிகமான அளவில் குடித்தால், அதனால் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். எனவே எப்போதும் இளநீரை ஒரே நேரத்தில் அதிகமான அளவில் குடிக்காதீர்கள்.
எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு
இந்நிலை ஏற்படுவதற்கு காரணம் இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். அதிலும் ஒரே நேரத்தில் இதனை அளவுக்கு அதிகமாக குடிப்பதன் மூலம், ஹைப்பர்கலீமியா (இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்) என்னும் நிலைக்கு உள்ளாகக்கூடும். இந்நிலை ஏற்பட்டால் மிகுந்த சோர்வு, தலைப்பாரம் மற்றும் சில நேரங்களில் மயக்கமடையவும் கூடும். அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகமானால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.