ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் தயாரித்தது. பட தயாரிப்புக்காக இந்த நிறுவனம், ‘ஆட் பீரோ அட்வர் டைசிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் கடன் வாங்கியது.
லாபத்தில் 20 சதவீதம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.10 கோடி கடன் பெறப்பட்டது. இது 2014 ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மீடியா ஒன் நிறுவனம் ரூ. 5 கோடிக்கு ‘செக்’ வழங்கியது. ஆனால் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்து விட்டதாக கூறி ஆட் பீரோ நிறுவனத்தினர் மீடியா ஒன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சென்னை பெருநகர 13–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு எதிராக கோச்சடையான் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆட் பீரோ நிறுவன வழக்கு விசாரணையின் போது மீடியா ஒன் நிறுவன இயக்குனர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. அவர்கள் ஏன் ஆஜராக இயலவில்லை என்பதற்கு அந்த தரப்பில் கோர்ட்டில் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த பெருநகர 13–வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு எஸ்.கோபிநாதன், ‘மீடியா ஒன்’ நிறுவன பங்குதாரர்கள் மீது ஜாமீனில் வரக்கூடிய ‘பிடிவாரண்டு’ பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் இந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.