சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ‘தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில், வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் திகதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடேசவரலு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரிடம் நிலம் தொடர்பாக புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்யும் பட்சத்தில், அதை சட்டப்படி 8 வாரத்துக்குள் விசாரித்து மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியது. இந்த உத்தரவின் அடிப்படையில், வெங்கடேசவரலு கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ந் திகதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந் திகதி தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் வந்தனா, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி முதல்வர் சார்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் ஆஜராகி, ‘ஒரு பள்ளிக்கூடத்தின் இடப்பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு நேரில் வரும்படி மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணை இயக்குனர் நோட்டீசு அனுப்ப அதிகாரம் கிடையாது’ என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ‘பள்ளி இடப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த இணை இயக்குனர் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
அதன்படி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அது பள்ளி நிர்வாகத்தின் கடமை. அதற்காக அந்த உத்தரவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்கலாம்‘ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தரேஷ், ‘நேரில் ஆஜராகவேண்டும் என்று இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் 2 வாரத்துக்குள் இணை இயக்குனர் முன்பு ஆஜராகி, தங்கள் பள்ளி நிலம் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்த பின்னர் 8 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.