மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்புக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் வருகின்றனர். இந்நிலையில் ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகைக்கு வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாரிவழங்கிய மராட்டிய அரசின் வள்ளல்தன்மை சமூக ஆர்வலர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
பாலிவுட் உலகின் கனவுக்கன்னி என முன்னர் அழைக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினி தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார். மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் கணவர் தர்மேந்திரா, மகன் மற்றும் மகளுடன் வசித்துவரும் ஹேமா மாலினி பரத நாட்டிய ஆசிரியையாகவும் உள்ளார்.
பரத நாட்டியத்துக்காக சிறப்பு பள்ளி ஒன்றை உருவாக்க மாநில அரசிடம் இலவசமாக நிலம் ஒதுக்கித்தரக்கோரி ஹேமா மாலினி விண்ணப்பித்திருந்தார். தற்போது மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் மும்பை புறநகரான அந்தேரியில் உள்ள அம்பிவ்லி என்ற இடத்தில் நாட்டியப்பள்ளி கட்ட 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை ஹேமா மாலினிக்கு அரசு ஒதுக்கியுள்ளது.
மாநில அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஹேமா மாலினிக்கு அந்த நிலம் என்ன விலைக்கு விற்கப்பட்டது? என்று ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலமும் வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி நிலத்தின் தற்போதைய குறைந்தபட்ச விலைமதிப்பு சுமார் 40 கோடியாக உள்ள நிலையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு பா.ஜ.க. எம்.பி.யான நடிகை ஹேமா மாலினிக்கு தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய அரசு ஒதுக்கியுள்ள விபரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
அதிலும், ஏற்கனவே அவருக்கு கடந்த 1997-ம் ஆண்டு நாட்டியப் பள்ளிக்காக ஒரு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் கடலோர கட்டுப்பாட்டு துறையின் கண்காணிப்பில் உள்ளதால் அங்கு ஹேமா மாலினியால் நாட்டியப் பள்ளியை கட்ட முடியவில்லை. அந்த நிலம் இன்னும் ஹேமா மாலினியின் பெயரில்தான் உள்ளது.
அவர் அந்த நிலத்தை அரசிடம் திருப்பி ஒப்படைக்காத நிலையில் இரண்டாவது முறையாக 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கியுள்ள மராட்டிய அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.