சுந்தர் சி. டைரக்ஷனில் ஹன்சிகா நடித்த ‘அரண்மனை’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘அரண்மனை-2’ என்ற பெயரில் படமானது. இதில், சித்தார்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
திரிஷா, ஹன்சிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் ஹன்சிகா 7 மாத கர்ப்பிணியாக வருகிறார். இது தொடர்பாக அவர், நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கர்ப்பிணி பெண்ணாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்:- மிகவும் சிரமப்பட்டேன். முதலில் 2 மாத கர்ப்பிணியாக நடிக்கும்படி, என்னிடம் டைரக்டர் சுந்தர் சி. கூறினார். இரண்டு மாத கர்ப்பம் என்பதை ஆறு அல்லது ஏழு மாத கர்ப்பமாக வைத்துக் கொள்ளலாமா? என்று நான் கேட்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, 7 மாத கர்ப்பிணியாக நடித்தேன். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பது சுலபம் அல்ல. நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரிய வேண்டும். அதற்காகவே நான் சிரமப்பட்டேன். படம் பார்த்து விட்டு, சுந்தர் சி. என் நடிப்பை பாராட்டினார்.
கேள்வி:- படப்பிடிப்பின்போது உங்களுக்கும், திரிஷாவுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்பட்டதே?
பதில்:- அது பொய். நானும், திரிஷாவும் நல்ல தோழிகள். இரண்டு பேரும் ‘டுவிட்டரில்’ எங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்று இருவருமே ‘டுவிட்’ செய்து இருக்கிறோம். திரிஷா எனக்கு ‘சீனியர்.’ அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கேள்வி:- இரண்டு பேரும் போட்டி போட்டு கவர்ச்சியாக நடித்திருப்பதாக பேசப்படுகிறதே…அது உண்மையா?
பதில்:- அது, உண்மை அல்ல. திரிஷா வேடம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என் வேடத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. குடும்பப்பாங்காகவே என்னை காட்டியிருக்கிறார்கள்.
கேள்வி:- இரண்டு பெரிய கதாநாயகிகள் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுமோ என்று டைரக்டர் பயப்படுவார். அந்த பயம் சுந்தர் சி.க்கு இருந்ததா?
பதில்:- சுந்தர் சி. திறமையான டைரக்டர் மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட. வெளிப்படையாக பேசுபவர். அவருக்கு அந்த பயம் இருந்ததாக தெரியவில்லை. எங்கள் இருவரையும் அவர் சமமாகவே நடத்தினார்.
கேள்வி:- முன்பை விட மிகவும் மெலிந்து காணப்படுகிறீர்களே…அதன் ரகசியம் என்ன?
பதில்:- ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், ‘ஸ்குவாஷ்’ விளையாடுகிறேன். தினமும் ‘யோகா’ செய்கிறேன். வேறு எந்த ரகசியமும் இல்லை.’’இவ்வாறு ஹன்சிகா கூறினார்.