இதற்கிடையில், சென்னையில் தினமும் காதலியுடன் கடலைபோடும் நண்பனுக்கும், இந்திரஜித்துக்கும் பிரச்சினை வர, அந்த கோபத்தில் இந்திரஜித்தின் பெற்றோர் அனுப்பிய கொரியரில் பலான இடத்தின் முகவரியை வைத்துவிடுகிறார் நண்பர்.
பெற்றோர்கள் அனுப்பிய போட்டோவை சாமியின் முன் வைத்து வணங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், எதிர்பாராதவிதமாக நாயகி தேவிகா அறிமுகமாகிறார். முதல் சந்திப்பே இருவருக்கும் மோதலில் ஆரம்பிக்கிறது.
பின்னர், பெண் பார்க்க போன இடத்திலும் இந்திரஜித் பிரச்சினையை சந்தித்துவிட்டுவர, அதே கோவிலுக்கு சென்று சாமியை வணங்கும்போது, மீண்டும் நாயகியை பார்க்கிறார். இந்த முறை இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பின்னர், தேவிகா தன்னை பெண் பார்க்க வரும்படி இந்திரஜித்திடம் கூறிவிட்டு செல்கிறாள்.
அதன்படி, இந்திரஜித்தும் தேவிகாவின் அப்பாவிடம் சென்று பேசுகிறார். சித்த வைத்தியரான தேவிகாவின் தந்தை இந்திரஜித்துக்கு மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்துவிட்டு, திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்.
பின்னர், திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாக துணி எடுப்பதற்காக செல்லும் இந்திரஜித் புதுவிதமான பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். இதனால், இவருக்கு கல்யாணம் நடக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இறுதியில், தேவிகாவுக்கும், இந்திரஜித்துக்கும் திருமணம் நடந்தா? இந்திரஜித் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் இந்திரஜித்துக்கு இது முதல் படம் என்றாலும் நடிப்பில் ஓரளவு தேறியிருக்கிறார். நாயகியாக வரும் தேவிகா மேனன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே என்பதுபோல் நடித்திருக்கிறார். படத்தில் நாயகனுக்கு நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் காமெடியில் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
அதேபோல், சிங்கமுத்து, சுவாமிநாதன், சிவசங்கர் மாஸ்டர் ஆகியோர் சேர்ந்து செய்யும் ரகளைகள் எல்லாம் வயிறு குலுங்க வைக்கின்றன. படத்தில் குறைவான கதாபாத்திரங்களை நடித்திருப்பதால், அனைவரைக்கும் சரிசமமான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாதவன். ஆனால், திரைக்கதைதான் கொஞ்சம் இழுஇழுவென இழுத்திருக்கிறார். அதேபோல், ஒவ்வொருத்தருக்கும் க்ளோசப் காட்சிகள் வைத்து போரடிக்க வைத்திருக்கிறார்.
செண்டிமென்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியில் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ரிசல் சாய் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கூடுதல் கவனம் தேவை. வாசன் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ பாத்து போங்க.