இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், தீபிகா படுகோனே. இவருக்கும், இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கும் காதல் ஏற்பட்டு பிறகு முறிந்தது. தற்போது இவர் ரன்வீர் சிங்கை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
‘‘என்னைப் பற்றி வதந்திகள் பரவி உள்ளன. காதலருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறேன் என்றும் கிசுகிசு பரப்பி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால், அவரை திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. குடும்ப உறவுகள் முக்கியம். அந்த உறவுகளை கவுரவிக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்து இருக்கிறேன்.
திருமணம் செய்யாமல் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது அவரவர் விருப்பம். காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமாக இருந்தாலும் சாகும்வரை நிலைக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும். என் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்காக பொருத்தமான கணவர் அமைந்ததும் சினிமாவை விட்டு விலக கூட தயாராக இருக்கிறேன். காதலில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளன. மீண்டும் அதுபோன்ற சங்கடங்கள் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஒருவரை காதலித்தால் என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விடுவேன்.
அவர் எனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்கவேண்டும். என்னை காதலித்துக்கொண்டே இன்னொரு பெண்ணையும் அவர் விரும்பினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். சரியான பதிலடி கொடுப்பேன்’’. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.