சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 74 பயணிகளுடன் நேற்று சென்றுகொண்டிருந்தது.
விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் தீயும் பற்றியுள்ளது.
இதனால் விமானி உடனடியாக மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமானப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் இந்த துரித நடவடிக்கையால் அதிக உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றும், அதில் ஒருவர் கவலைக்கிடமான வகையில் உள்ளார் என்று அந்த விமான நிறுவனத்தின் பிரதிநிதி அப்டினாசீர் நுர் கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், விமானத்தில் ஓட்டை விழுந்த போது, ஆக்சிஜன் முகமூடியுடன் மரண பயத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.