சீனாவில் வருகிற 8–ந்தேதி குரங்கு புத்தாண்டு பிறக்கிறது. அதில் பங்கேற்க சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பயணம் செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அங்கு ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக குயான்ஷு, வூகன் உள்ளிட்ட மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. எனவே இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ், ரெயில் மற்றும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள ரெயில் மற்றும் விமான நிலையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.
அது போன்று வோன் ஷுவில் ஷாங் என்ற பெண்ணும் சிக்கி கொண்டார். இவர் ஒரு மோட்டார் கம்பெனி ஊழியர் ஆவார். இந்த நிலையில் திடீரென அங்கு ஒரு விமானம் புறப்பட தயார் நிலையில் இருப்பதை அறிந்தார்.
உடனே அங்கு விரைந்து சென்று 1200 யூயான் (ரூ. 2800) கொடுத்து டிக்கெட் எடுத்து விமானத்தில் ஏறினார்.
உள்ளே சென்று பார்த்த போது விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தது. இவர் மட்டுமே தனியாக இருந்தார். ஏனெனில் பனிப்பொழிவு காரணமாக அங்கு வந்து யாராலும் விமானத்தை பிடிக்க முடியவில்லை.
எனவே, ஷாங் மட்டும் தனியாக பயணம் செய்தார். அவருக்கு விமான பணிப்பெண்கள் மகிழ்ச்சியுடன் சேவை செய்தனர். விமானிகள் வந்து அவருடன் நேரடியாக பேசி கை குலுக்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் துள்ளிக்குதித்து நடனம் ஆடினார்.
2 மணி நேரம் விமானத்தில் தான் மட்டும் தனியாக பயணம் செய்தார். தனது இந்த அனுபவத்தை போட்டோவுடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மகிழ்ச்சியடைந்தாகவும் தான் ஒரு ‘ராக் ஸ்டார்’ அனுபவத்தை பெற்றதாகவும், இது போன்ற தருணத்தை தான் எப்போதும் அனுபவித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.