விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பை வெளியிட உதவும் ஒலிபெருக்கி சாதனத்தை பயன்படுத்தி பிரபல பாடகர் சோனு நிகாம் பாட்டுப்பாட அனுமதியளித்ததற்காக பணிப்பெண்கள் உள்பட ஐந்து பேரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
பிரபல இந்திப் பாடகர் சோனு நிகாம் கடந்த மாதம் நான்காம் தேதி ஜோத்பூரில் இருந்து மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அவரது குரலில் வெளியான பிரபல பாடல்களை பாடும்படி அன்புக் கட்டளை இட்டனர். இதை ஏற்றுகொண்ட சோனு நிகாம், அனைவருக்கும் கேட்கும்படி பாடுவதற்கு வசதியாக அவ்விமானத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனத்தை பணியாளர்கள் மற்றும் பணிப்பெண்கள் கொண்டுவந்து தந்தனர்.
அந்த மைக்கின் உதவியுடன் வீர் சாரா உள்ளிட்ட இரு இந்திப் படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை சோனு நிகாம் பாடினார். பயணிகள அனைவரும் உற்சாகத்துடன் அவற்றை கேட்டு ரசித்தனர்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரிமாறப்பட்டதன் விளைவாக, அந்த விமானத்தில் ஒலிபெருக்கியை தந்து கச்சேரி நடத்த உதவியாக இருந்த பணிப்பெண்கள் உள்பட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தவும், ஒழுங்கு, கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு விஷயத்திலும் அவர்களுக்கு சிறப்பு ஆலோசனை அளிக்கவும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.