கிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த குடிப்பழக்கம் இருக்கும் இவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை.
அதே ஊரில் தந்தையின் குடியால் குடும்பத்தை இழந்த நாயகி, குடிப்பழக்கம் இல்லாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இவருக்கும், ராஜூவுக்கும் ஒரு மோதலில் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. காதலித்த உடனே ராஜூவிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா? என்று நாயகி கேட்க, அதற்கு விரைவில் குடிப்பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் குடிப்பழக்கம் இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடிந்து முதல் இரவில் ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருப்பது நாயகிக்கு தெரிய வருகிறது. அன்று முதல் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது.
இறுதியில், இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை ராஜ் சமாளித்தாரா? பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் ராஜ் ஆசிரியராக இருந்தாலும், படம் முழுக்க அப்பாவியாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது. குடிப்பழக்கத்தை கைவிட இவர் எடுக்கும் முயற்சிகள் கலகலப்பு. ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க தவறியிருக்கிறார். இவருடைய முகபாவனைகளும், பேசும் வசனங்களும் பொருந்தாமல் இருக்கிறது.
பள்ளி பியூனாக நடித்திருக்கும் காந்தராஜ், குடிப்பழக்கத்தால் இவர் படும்பாடு திரையில் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. காமெடி கதாபாத்திரம் ஏற்று தன்னால் முடிந்தவரை நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நாட்டில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என சமூக விழிப்புணர்வோடு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செந்தில் ராஜா. குறிப்பாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதை பிரித்து காண்பித்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
சிவசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ கடைபிடிக்க வேண்டும்.