பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள நீர்ஜா படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
1986ம் ஆண்டு கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினர். அப்போது பயணிகளைக் காப்பாற்ற முயன்ற விமான பணிப்பெண் நீர்ஜா பனோட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவரை மையப்படுத்தி பாலிவுட்டில் ராம் மத்வானி இயக்கத்தில் நீர்ஜா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வாங்கி வெளியிடுவதற்கு முதலில் தடையில்லா சான்று அளித்த தகவல் மற்றும் வர்த்தகத்துறை பின்னர் அதனை விலக்கிக்கொண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேபிள் மூலம் படத்தை காண்பிக்கக்கூடாது என்றும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூறியுள்ளது.
நீர்ஜா படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.