ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் சினிமா இயக்குநர் சேரனின் சி 2 எச் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.8.40 லட்சம் முன்பணம் செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் சினிமா டி.வி.டி. விற்பனை உரிமையை பெற்று இருந்தார்.
நிறுவனம் முறையாக செயல்படாததால் முன் பணமாக செலுத்திய ரூ.8.40 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதை தொடர்ந்து நிறுவனர் சேரன் மற்றும் நிர்வாக இயக்குநர் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகியோர் 2015–ம் ஆண்டு ஆக. 16–ந்தேதி காசோலை வழங்கியுள்ளனர்.
அந்த காசோலையை 3 முறை வங்கிக்கு கலெக்சனுக்கு அனுப்பியும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதை தொடர்ந்து பழனியப்பன் ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி வேலுச்சாமி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். சேரன் சார்பில் வக்கீல் சோமசுந்தரம் ஆஜராகி நீதிமன்ற அழைப்பாணை கிடைக்காததால் நேரில் ஆஜராகவில்லை என்றும், அழைப்பாணை கிடைத்தால் நேரில் ஆஜராவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து திரைப்பட இயக்குநர் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகியோர் மார்ச் 10–ந்தேதி ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.