இந்திப்பட சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்தியாவில் சகிப்பின்மை நிலவி வருவதாக கடந்த நவம்பர் மாதம் கூறினார். அதிலிருந்து அவருக்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஷாருக்கான் நடித்து வரும் ‘ரயீஸ்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு, குஜராத் மாநிலம் புஜ் நகரில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
படக்குழுவினர், ஆமதாபாத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். இதற்கிடையே, நேற்று காலையில், மோட்டார் சைக்கிள்களில் ஓட்டலுக்கு வந்த சுமார் 10 பேர், ஷாருக்கானுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே, வாகன நிறுத்த பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பினர்.
அதில், ஷாருக்கான் காரின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. சம்பவத்தின்போது, ஷாருக்கான் அந்த ஓட்டலில் இல்லை. அவர் பிற்பகலில்தான் ஓட்டலுக்கு வந்தார். ஓட்டலின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின்பேரில், விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு குஜராத் மாநில விசுவ இந்து பரிஷத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.