சத்தியத்திற்கும் ஆண்களுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். செய்த சத்தியங்களை காப்பது ஆண்களால் என்றுமே முடியாத காரியம் அல்ல, ஆனால் காதலில் கொஞ்சம் சந்தேகம் தான். ஏனெனில், பெண்கள் கேட்கும் சத்தியங்கள் அப்படி.
காதலில் பயணிக்கும் முன்பு வரை, ஏன் காதலை வெளிப்படுத்திய முதல் ஓரிரு நாட்கள் வரை அவரவருக்கு பிடித்தது போல இருக்கலாம், இருவரும் சுதந்திரமாக இருப்போம், யார் வாழ்விலும் மற்றொருவர் குறுக்கிட மாட்டோம் என கூறுவார்கள்.
ஆனால், அந்த ஓரிரு நாட்கள் கடந்த பிறகு தான் வேதாளம் முருங்கை மரம், புளியமரம் எல்லாம் ஏற ஆரம்பிக்கும். அப்போது தான் சில பல சாத்தியங்களை பெண்கள் காதலனிடம் கேட்க ஆரம்பிப்பார்கள்…
உனக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உன்னுடனே இருப்பேன், உன்னை விட்டு விலகி போகமாட்டேன்.
என்னவாக இருந்தாலும் சரி, உன்னை மகிழ்ச்சியாகவும், அக்கறையாகவும் பார்த்துக் கொள்வேன்.
உனக்கு என்றும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பேன்.
எந்நாளும் உன் மீது வைத்திருக்கும் காதல் குறையாமல் உன்னை நேசிப்பேன்.
உன்னிடம் இருந்து எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க மாட்டேன்.
சரியான நேரத்தில் உன்னுடன் நேரத்தை செலவிட என்றும் மறுக்க, மறக்க மாட்டேன்.
கண்டிப்பாக தவறுகள் நடக்கும் போது, அது என்னால் என்றிருந்தால் ஒப்புக்கொள்வேன்.
உன் பழங்கால வாழ்கையை பற்றி ஒரு போதும் கேட்க மாட்டேன் (கொஞ்சம் கஷ்டம் தான்).
சத்தியமாக குடிக்கவோ, புகைக்கவோ மாட்டேன். (எவ்வளோ சத்தியம் பண்ணிருப்போம், அத மறந்துருப்போம்)
முதன்முதலில் பார்த்த நாள், திருமண நாள், பிறந்தநாள் போன்ற முக்கியமான நாட்களை மறக்க மாட்டேன்.
உன்னிடம் எப்போதும் பொய் கூற மாட்டேன், அது எதுவாக இருந்தாலும் சரி, எந்த சூழலாக இருந்தாலும் சரி.
உன்னை தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.
வாகனம் ஓட்டும் போது, குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்ய மாட்டேன்.
உங்கள் வீட்டு நபர்களை பற்றி ஒரு போதும் தவறாக பேசமாட்டேன்.
உன்னை என்றும் ஒரு தேவதை போலவே உபசரிப்பேன். நீ இதயம் உடைந்து போவது போன்று ஒருபோதும் நடந்துக் கொள்ள மாட்டேன்.