உலகம் முழுவதும் நொறுக்குத் தீனியாகும் உணவுப் பொருள், வேர்க்கடலை. இது ருசியும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்தது. அதனால் எல்லா நாட்டு மக்களின் சமையல் அறைகளிலும் ஏதாவது ஒருவிதத்தில் வேர்க்கடலை உணவாக சமைக்கப்படுகிறது.
நெடுங்காலமாக நம் நாட்டில் பயிரிடப்பட்டு நம் மண்ணை சார்ந்த உணவாக அறியப்பட்டாலும் இது தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில் நாட்டு வழியாக ஆசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக உணவியல் வரலாறு தெரிவிக்கிறது. இன்று வேர்க்கடலை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
இதில் வைட்டமின், புரதம் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் சமச்சீர் சத்துணவாக திகழ்கிறது. முற்காலத்தில் தென் மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டு மக்களின் பசி ஆற்றப்பட்டது. அப்போது கஞ்சியோடு சேர்த்து ஒரு கைப்பிடி வேர்க்கடலையும் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் கூறுகின்றன. சத்துக்காக அதனை வழங்கிவந்திருக்கிறார்கள். வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருப்பதால் அது உடல் பருமனை கூட்டும் என்றும், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதனால் இதய நோய் உண்டாகக்கூடும் என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால் வேர்க்கடலை பற்றிய ஆராய்ச்சிகளில் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
100 கிராம் வேர்க்கடலையில் 16 கிராம் நல்ல கொழுப்பு உள்ளது. இது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. மேலும் இதில் இருக்கும் ஓமேகா–3 சத்து, கெட்ட கொழுப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிக குறைவாகவே உள்ளது. அதனால் இதனை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை.
வேர்க்கடலை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டுவது இல்லை. அதனால் சர்க்கரை நோயாளிகளும் தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடலாம். இதில் இருக்கும் புரதச்சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமான உணவு. முட்டையில் இருப்பதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் உள்ளது. மேலும் இதில் இருக்கும் ‘போலிக் ஆசிட்’ பெண்களின் கருப்பையை சீராக செயல்படவைக்கும். கருப்பையில் கட்டிகள் உருவாகுவதையும் தடுக்கும்.
இதில் இருக்கும் கால்சிய சத்து, எலும்பு சிதைவு நோயில் இருந்து காப்பாற்றும். வேர்க்கடலை உருண்டை தயாரித்து, குழந்தைகளுக்கு தினமும் ஒன்று வீதம் வழங்கிவரவேண்டும். வேர்க்கடலை அதிகம் சாப்பிடுவதால் பித்தம் அதிகரிக்கும். அதனால் அளவோடு சாப்பிடவேண்டும். தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஆரோக்கியம் பெருகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.