மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரிஸ் படத்தின் ரீமேக் தான் ஆறாது சினம். ஈரம், வல்லினம் இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்த அறிவழகனின் மூன்றாவது படம் என்ன? என எண்ணிய போது சொந்த கதையை இயக்காமல் ரீமேக் படத்தை இயக்கவதாக அறிவித்தார். இது கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், ஜீத்து ஜோசப் கதை என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருந்தன.
மலையாளப் படத்தை தமிழில் அதேபோல் எடுக்காமல் சில காட்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இயக்கியுள்ளார் அறிவழகன். மலையாளப் படத்தில் ஹீரோவிற்கும் சரி, வில்லனுக்கும் சரி எந்தவித மாஸ் காட்சிகள் இருக்காது. படம் எந்த வேகத்தில் ஆரம்பித்ததோ அதே வேகத்தில் செல்லும். அருள்நிதியின் ஓப்பனிங் காட்சியை பார்க்கும்போது எங்கே படத்தை ஆக்சன் படமாக மாற்றிவிட்டனரோ என எண்ண வைத்தது. ஆனால் அந்த என்கவுண்டர் ஆக்சன் பிளாக் வைத்தாலும் மற்ற காட்சிகளில் அருள்நிதியை இயல்பாகவே நடிக்கவைத்துள்ளார். பொதுவாக ரீமேக் படங்களில் வேறு ஒரு நாயகனை ரீப்ளேஸ் செய்யும் போது, படத்திற்கு செட்டாக மாட்டார்கள். ஆனால் அருள் நிதி, பிரித்விராஜ்க்கு குறைச்சல் இல்லாமல் நடித்துள்ளார்.
தமிழுக்காக மாற்றம் செய்யப்பட்ட சில காட்சிகள் மலையாளத்தை விட நான்றகவே இருந்தன. ஆனால் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தை ரோபோ ஷங்கருக்கு கொடுத்து காமெடியாக கதையை நகர்த்த முயன்றதில் இயக்குனர் தோல்வியை தழுவி உள்ளார். சீரியசாக செல்லவேண்டிய காட்சிகளில் ரோபோ சங்கரின் காமெடிகள் எடுபடாததால் சீரியஸும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் உள்ளது. முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் அரசியல் நையாண்டிகளை பயன்படுத்தி காமெடி செய்ய முயன்றுள்ளார் ரோபோ. மேடை பெர்பாமன்ஸ்கு அது சரியாக பொருந்தலாம். படத்திற்கு எல்லாம் செட் ஆகாது. முக்கியமான கதாபாத்திரத்தில் நம்பி நடிக்கவைத்த இயக்குனருக்கு, ரேபோ சங்கர் ஏமாற்றமே அளித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதி தான் படத்தை முழுவதுமாக தாங்கி நிற்கின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். படம் ஆரம்பம் முதல் முகத்தையே காட்டாமல் கிளைமேக்ஸ் வரை அதகளப்படுத்திய கவுரவ் நாராயணனை கிளைமேக்ஸ்-ல் பார்க்கும்போது சட்டென்று அடையாளம் தெரியவில்லை. தூங்க நகரம், சிகரம் தொடு இரண்டு படங்களையும் எழுதி, இயக்கி, நடித்த கவுரவ் நாராயணன் தான் இந்த படத்தில் வில்லன். கொஞ்சம் மிரட்டலாகவே நடித்துள்ளார்.
இசை இந்த படத்திற்கு பின்னடைவு. மலையாளத்தில் படத்திற்கு முக்கிய முதுகெலும்பே இசை தான். ஆனால் இந்த படத்தில் அதற்கு நிகரான இசையை தமன் வழங்கவில்லை. அதுவும் சத்ரியன் மியூசிக் வரும்போது எல்லாம் நமேக்கே தமனின் இசையில் ஆறாது சினம் வந்துவிடும்போல் உள்ளது. மலையாளப படத்தில் கேமரா கோணங்களும், கிராபிக்ஸ் காட்சிகளும் கொஞ்சம் ஹாலிவுட் தழுவல்போல் இருக்கும் அதை இப்படத்தில் தவிர்த்துள்ளனர் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.
மொத்தத்தில் இப்படம் வித்தியாச கதை விரும்பிகளுக்கு விருந்து..!