வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள பேய் படம் ‘சவுகார்பேட்டை’. இதில் பேய், மந்திரவாதி என்று இரட்டை வேடங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.
இதுபற்றி கேட்டபோது… ‘‘இந்த படத்தில் பேய், மந்திரவாதி என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்த இரண்டு பேரும் மோதுவது போன்ற காட்சி படமான போது மிகவும் சிரமப்பட்டேன்.
பேய் வேடம் போட்டுக் கொண்டு மந்திரவாதியுடனும், மந்திரவாதி வேடத்தில் பேயுடனும் மோதும் காட்சி படமானபோது ஒரு வேடத்தில் நின்று கொண்டு மற்றொரு வேடத்துடன் மோதுவது போன்று கற்பனை செய்து கொண்டு சண்டை காட்சியில் நடித்தேன். இது புதிய அனுபவம்.
எனக்கு ஜோடியாக நடித்துள்ள ராய் லட்சுமியும் பேயாக வருகிறார். அவரை வித்தியாசமாக காட்டி இருக்கிறார்கள். ஒரு கவர்ச்சி பாடல் வேண்டும் என்று டைரக்டரிடம் ராய் லட்சுமி அடம் பிடித்தார். ஆனால் டைரக்டர் அதை ஏற்க மறுத்து விட்டார். வில்லனாக சுமன் நடித்திருக்கிறார். உண்மையான சுடுகாடுகளில் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது.
சில மணி நேரத்துக்கு ஒருமுறை பிணம் வந்து கொண்டிருக்கும். மற்றொரு பிணம் எரிந்து கொண்டிருக்கும். சரியாக சாப்பிட முடியாது. தூங்க முடியாது. எலும்புகளும் கிடக்கும். சுமனும், வடிவுக்கரசியும் பதறிவிட்டார்கள்.
கிராமத்தில் இருந்து வெளியே போகாத ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருந்தது. அவர் ஒரியா மொழியில் பேசினார். அது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. நான் கடவுளை நம்புகிறேன். பேய்களையும் நம்புகிறேன். கால்களை போர்வையால் போர்த்தியபடி தூங்காவிட்டால் கால்களை பேய் இழுத்து விடும் என்ற பயம் சிறு வயதில் எனக்கு உண்டு. உண்மையான காதல் வெற்றி பெறும். அனைத்தையும்விட கடவுள்தான் உயர்வானவர் என்ற கருத்தை ‘சவுகார்பேட்டை’ சொல்கிறது’’ என்றார்.