அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார்.
பழனியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகை ராதிகா பங்கேற்று நடித்து வருகிறார். இதனிடையே பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பழனி அருகே நடந்து வரும் படப்பிடிப்புக்காக வந்தேன். தற்போது கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தேன். நான் தீவிர அரசியலுக்கு எப்போது வருவேன் என எனக்கு தெரியாது. இந்த கேள்வியைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் பதில்தான் எனது பதிலும்.
நான் எப்படி வருவேன் எப்போது வருவேன் என்பதை காலம்தான் முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவரான சரத்குமார்தான் முடிவு செய்வார். அதில் நான் தலையிடமாட்டேன் என்று தெரிவித்தார்