பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.
கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், அவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மும்பை பாந்திரா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்தநிலையில், சஞ்சய் கபூரும், அவரது தாயார் ராணி கபூரும் சேர்ந்து தன்னை வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், மன ரீதியாக மிகவும் துன்புறுத்தியதாகவும் கூறி 41 வயது நடிகை கரீஷ்மா கபூர், கார் போலீசில் புகார் மனு அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதன்பேரில், போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கரீஷ்மா கபூரின் கணவர் சஞ்சய் கபூர் மற்றும் மாமியார் ராணி கபூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால், தனது மீதான இந்த குற்றச்சாட்டை சஞ்சய் கபூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஒரு மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக, குடும்பத்துக்கு நல்ல மருமகளாக இருக்க கரீஷ்மா கபூர் தவறிவிட்டார். பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அவர் என்னை திருமணம் செய்தார். தற்போது அதே பணத்துக்காக குழந்தைகளை அவர் பகடைக்காயாக பயன்படுத்துகிறார்’’ என்றார்.
இதேபோல், தன்னுடைய வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட தந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க கரீஷ்மா கபூர் இடம்கொடுக்கவில்லை என்றும் சஞ்சய் கபூர் குற்றம்சாட்டினார்.