ரஷியத் தலைநகர் மாஸ்கோவின் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஒரு பெண், துண்டிக்கப்பட்ட குழந்தை தலையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி ‘‘நான் ஒரு தீவிரவாதி, உனது மரணத்துக்குத்தான் ஆசைப்பட்டேன்’’ என்று உரத்த குரலில் கூறிக் கொண்டே இருந்தார்.
போலீசார் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணைக்காக கொண்டு சென்றனர். அப்போது அந்த பெண் மாஸ்கோ நகரில் ஒருவருடைய வீட்டில் ஆயாவாக வேலை பார்த்து வந்ததும், தனது பராமரிப்பில் இருந்த 3 வயது குழந்தையை தலையை துண்டித்துக் கொன்றுவிட்டு பின்னர் தனது எஜமானரின் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியதும் தெரிய வந்தது.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருதப்படுவதால் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் உஸ்பெகிஸ்தானில் இருந்து ரஷியாவில் குடியேறியவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எகிப்தில் ரஷிய பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாசவேலையே காரணம் என்பதால், துண்டிக்கப்பட்ட குழந்தை தலையுடன் மாஸ்கோ நகரில் பெண் நடமாடியது ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என்று ரஷிய உளவுத்துறை கருதுகிறது. இதனால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.