அல்-கொய்தா தலைவர் பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அந்த இடத்தில், 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அராபிய மொழியில் இருந்த அந்த ஆவணங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவற்றில் முக்கியமான சில ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன.
அவற்றில், கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் அடங்கும். அது, 1990-களில் பின்லேடனால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. அதை பின்லேடனின் கடைசி உயிலாக அமெரிக்க உளவு அமைப்புகள் வர்ணிக்கின்றன.
ஏனென்றால், சூடான் நாட்டில் தான் விட்டுச்சென்ற 29 மில்லியன் டாலரை (சுமார் ரூ.200 கோடி), தனது இறப்புக்கு பிறகு எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அதில் பின்லேடன் குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடன், சூடான் நாட்டு அரசு விருந்தினராக அந்நாட்டில் 5 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின்னர், 1996-ம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நிர்பந்தத்தால், அவரை அங்கிருந்து சூடான் அரசு வெளியேற்றியது. அவரது பணமும் அங்கேயே உள்ளது.
பின்லேடன் எழுதியதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள கடிதத்தில், சூடானில் உள்ள ரூ.200 கோடியில் ஒரு சதவீத பணத்தை அல்-கொய்தா மூத்த தலைவர் மபூஸ் அவுல்ட் அல்-வாலித்துக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.20 லட்சம்வரை அல்-வாலித்துக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சூடானில் உள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவருக்கு பரிசு கொடுப்பதாக, தான் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பின்லேடன் அதில் எழுதி உள்ளார்.
இன்னொரு ஒரு சதவீத பணத்தை மற்றொரு கூட்டாளியான என்ஜினீயர் அபு இப்ராகிம் அல்-இராகி சாத்துக்கு கொடுக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார். அந்த நபர், சூடானில் பின்லேடனின் முதலாவது கம்பெனியை நிறுவ உதவியவர் ஆவார்.
குறிப்பிட்ட அளவு சவுதி ரியால் பணத்தையும், தங்கத்தையும் தனது தாயார், மகன், மகள், சித்தப்பா, சித்தப்பாவின் பிள்ளைகள், தாயாரின் சகோதரிகள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மீதி பணம் முழுவதையும், புனித போருக்காக பயன்படுத்துமாறு பின்லேடன் கேட்டுக்கொண்டுள்ளார். தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி பின்லேடன் எழுதிய மற்றொரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தந்தைக்கு முன்பே, தான் இறந்து விட்டால், தன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் தந்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
‘உங்களுக்கு பிடிக்காததை நான் செய்திருந்தால் என்னை மன்னியுங்கள்’ என்று கடிதத்தின் இறுதியில் தந்தையிடம் பின்லேடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.