வெள்ளித்திரையை விட மிகப்பெரிய கனவுப் பட்டறை சின்னத் திரைதான் எனலாம். தினம் தினம் நிகழ்ச்சிகள், தொடர்கள், டி.ஆர்.பி ரேட்டிங்குகள் என நாளும் கடினமாக வேலை செய்ய வேண்டும். இந்நிலையில் ஐந்து வருடம் ஒரு சீரியலை ஓட வைத்து அதற்காக மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் பெறுவதும் கூட டிவியில் ஒரு சவாலான விஷயம் தான்.
அப்படி மிகப்பெரிய சவாலாகவே ஐந்து வருட காலங்கள் ஓடி வெற்றிகரமாக நிறைவடையவிருக்கிறது அழகி தொடர். இதுவரை மருமகள், மாமியார், வீட்டின் தலைவி, அல்லது ஒரு பெரிய குடும்பம் அதை நிர்வகிக்கும் தலைவி என்ற ரீதியில் தான் தொடர்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் அவரைச் சுற்றிய கதை என எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணின் போராட்டத்தை ஆழமாகக் காட்டிய சீரியல்.
இந்தத் தொடருக்குக் கதை எழுதியிருக்கிறார் முத்து செல்வம். இவர் சுமார் 15 வருடங்களுக்கும் மேல் தொடர்களின் கதை உருவாக்கத்தில் பணிபுரிபவர். மெட்டி ஒலி, தென்றல் என பார்க்காத சீரியல் இல்லை. அவர் பேசுகையில், இத்தனை சீரியல்களைக் கடந்து வந்துவிட்டேன் என்றாலும் அழகி சீரியல் தான் எனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. மிகவும் சவாலான பாத்திரங்கள், கதை என பலரும் என்னைப் பாராட்டினார்கள். மேலும் ஐந்து வருட பயணம் உண்மையில் ஒரு பெரிய குடும்பமே உருவாகியுள்ளது. இப்போது மீண்டும் அதே 10.30 மணி இளமை துள்ள ஃப்ரெஷான தொடர் வருகிறது தயாராக இருங்கள். என்றார்.
தொடரில் துணை இயக்குநராக வேலை செய்த அபு கூறுகையில், நாங்கள் யாரையும் மேடம் , சார் எனக் கூப்பிடுவதில்லை எல்லாரையும் அக்கா, அண்ணா என்றழைத்தே பழக்கம். உண்மையில் பிரியும் தருவாயில் பலரும் அழுது விட்டோம். நன்றிகள், பாராட்டுகள், மன்னிப்புகள் என எமொஷனலான தருணமாகவே அமைந்தது. கேக் வெட்டினோம், புகைப்படங்கள் எடுத்து பூசணிக்கய் உடைக்கையில் கண்கலங்கியது என்றார் அபு.
தற்போது அழகி தொடர் வரும் வெள்ளியுடன் முடிவடைந்து , திங்கள் முதல் புது சீரியலும் தயாராகிவிட்டது. அதுவும் இளைஞர்களைக் கவரும்படி. ட்ரெண்டியாக, கொஞ்சம் மாடர்னாகவும் வரவிருக்கிறது.