மரப் பிசினினுள் சிக்கி உறைந்து போயுள்ள பல்லிகளை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள், அவை 99 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம், `தொலைந்துபோன உலகத்தை’ பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த இந்த பல்லிகளின் தோல் செதில்கள், நாக்கு ஒன்றின் முனை, மற்றும் சிறிய நகங்கள் ஆகியன நல்ல நிலையில் உள்ளன.
எச்சங்களில் இரண்டு, நவீன காலத்து பச்சோந்திகள் மற்றும் கெகோஸ் பல்லி இனங்களுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.
பல்லிகளின் பற்றிக்கொள்ளும் பாதங்கள் எவ்வாறு பரிணாமமடைந்தன என்பதை இதன் மூலம் கண்டறிய முடியும்.
கிரீத்தேசிய காலம் எனப்படும் காலத்தின் நடுப்பகுதியில் இந்த பல்லியினங்கள், வெப்பமண்டல காடுகளில் வாழ்ந்துள்ளன. இந்தப் பகுதி, தற்போது மியன்மார் என அழைக்கப்படுகிறது.
அமெரிக்க ஆய்வாளர்கள் இது தொடர்பாக தாம் மேற்கொண்ட மதிப்பீட்டு ஆய்வுகளை அறிவியல் சஞ்சிகையான சயன்ஸ் அட்வான்ஸஸில் பிரசுரித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இந்த எச்சங்கள், தனியாக சேகரிப்பில் ஈடுபடுபவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.