தலைவாசல் விஜய்- ரேகா தம்பதியின் இரட்டை வாரிசுகள் ஸ்ரீகாந்த். இதில் தம்பி ஸ்ரீகாந்த்துக்கும், ராய் லட்சுமிக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல். இந்த விஷயம் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு தெரிந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில், அண்ணன் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமி மீது காதல் கொள்கிறார். எப்படியாவது ராய் லட்சுமியை அடைய வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய, அண்ணன் ஸ்ரீகாந்த்தை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, சவுகார்பேட்டையில் சேட்டாக இருக்கும் சுமன், அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பணம் வாங்கியவர்களின் சொத்துக்களை அபகரித்தும் வருகிறார். இவரிடம் பணம் வாங்கியவர்களின் பட்டியலில் ஒருவராக தலைவாசல் விஜய்யும் இருக்கிறார். பணம் கட்ட முடியாத தலைவாசல் விஜய், ரேகா, ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி அனைவரையும் கொலை செய்து விடுகிறார்.
இதில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த்தும், ராய் லட்சுமியும் பேயாக மாறுகிறார்கள். இவர்கள் தங்களை கொலை செய்த சுமனை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமியும் சுமனை பழி வாங்கினார்களா? அண்ணன் ஸ்ரீகாந்த் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஸ்ரீகாந்த் அண்ணன், தம்பி என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அழகான ஸ்ரீகாந்த்தாகவும், அகோரமான ஸ்ரீகாந்த்தாகவும் நடித்திருக்கிறார். முந்தைய படங்களில் விட இப்படத்தில் கூடுதல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய அழகாலும், பேயாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி.
சுமன், சிங்கம்புலி, தலைவாசல் விஜய், ரேகா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக பேய் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் பேய் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.
ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியையும் பயமுறுத்துமளவிற்கு கொடுத்திருக்கிறார். சீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சவுகார் பேட்டை’ பயமான பேட்டை.