கிராமத்து இளைஞர்களான நாயகன் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகிய நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள். வேலை வெட்டிக்கு போகாமல், குடி, கூத்து, கும்மாளம் என சுற்றும் இவர்கள், யாருக்கும் பயப்படாமல் வீண் சண்டையிலும் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் ஒருவர் தன்னுடைய முறைப்பெண்ணை காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் தந்தை, வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார். இதையறிந்த நண்பர்கள் பெண்ணின் தந்தையிடம் சண்டை போடுகிறார்கள். அதற்கு அவர் ‘வேலைக்கு செல்லுங்கள் என் பெண்ணை கட்டித் தருகிறேன்’ என்று கூறி உசுப்பேற்றுகிறார்.
இதனால் நண்பர்கள் நான்கு பேரும் வேலை தேடி சென்னைக்கு செல்கிறார்ள். சென்னையில் நாயகி அனிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் பாரதி. பின்பு அவருடன் பழகி காதலை சொல்லி, நண்பர்களும் அவருடன் பழகி வருகிறார்கள்.
சென்னையில் வெட்டு ரவி என்னும் ரவுடிக்கும், அனிதாவுக்கும் முன் பகை இருக்கிறது. எனவே, அனிதாவை பழி வாங்கும் விதமாக அவருடன் சுற்றும் பாரதியின் நண்பர்கள் இருவரை கொன்று விடுகிறார் வெட்டு ரவி.
காரணம் என்னவென்று தெரியாமல் தவிக்கும் பாரதி, தன்னுடைய நண்பர்களை கொன்ற வெட்டு ரவியை பழி தீர்த்தாரா? அனிதாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நான்கு இளைஞர்களும் திரை முழுவதும் வருகிறார்கள். முதல் பாதியில் கிராமத்து இளைஞர்களாகவும், இரண்டாம் பாதியில் சென்னை இளைஞர்களாகவும் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அனிதா, பரிமளா என்று இரண்டு கதாநாயகிகள். முதல் பாதியில் வரும் பரிமளா கிராமத்து பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் வரும் அனிதா நகரத்து பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். நடிப்புக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
நண்பர்கள் பற்றிய பல படங்கள் வந்திருந்தாலும் இதை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாரதி.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் பேசப்படும். கூடுதல் கதாபாத்திரங்களை அமைத்து சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்கியிருக்கலாம்.
புருஸ் பால் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையையும் ஓரளவு கொடுத்திருக்கிறார். பகவதி ராஜாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘பக்கி பயலுக’ பரவாயில்லை.