இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத கதை’ படத்தில் பஸ்ட்லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பின் தங்கிய மாநிலத்தில் பிறந்து கிரிக்கெட் விளையாடிபடி ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையை துவங்கியவர் மகேந்திர சிங் தோனி. தோனி இந்தியாவிற்காக விளையாட ஆரம்பித்த பிறகு நடந்தவை அனைத்தும் அனைவரும் அறிந்த வரலாறு.
ஆனால் தோனி இன்று அடைந்திருக்கும் இடத்திற்கு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள் அதில் ஏற்பட்ட தோல்வி, அவரது இளம் பருவம், குடும்ப பின்னனி குறித்து ரசிகர்களுக்கு தெரிந்தவை மிகக் குறைவு. தோனியும் தன்னை பற்றி பேசுவதில் அதிகம் விரும்பம் இல்லாதவர்.
தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றிகளை எதிர்கொண்டாரோ அதே அளவுக்கு விமர்சனங்களில் இருந்தும் அவர் தப்பவில்லை. கேப்டனாக இருந்து பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்த அவர் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் அவரது வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்துக்கு எம்.எஸ்.தோனி என்று பெயர் வைக்கப்படவுள்ளது.
’எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத கதை’ படத்தின் பஸ்ட்லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோனியாக நடிக்கும் சுஷாந்த் சிங் ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் சென்றுக்கொண்டிருக்கும் போது தன்னந்தனியாக டிக்கெட் பரிசோதகர் உடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்துள்ளார். போஸ்டரில், இந்த மனிதரை உங்களுக்கு தெரியும் ஆனால் இவரின் பயணம் பற்றி உங்களுக்கு தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.
பஸ்ட்லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது தோனி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முந்தைய வாழ்க்கைக்கு, படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. படம் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வெளியாகிறது.