‘‘நான் ஜோதிகாவின் ரசிகை. சிறந்த நடிகை என்ற பெயர் வாங்குவதே என் லட்சியம்’’ என்று தமன்னா கூறினார்.
நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
‘‘நான் நடிகையானதற்காக சந்தோஷப்படுகிறேன். இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன். சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதே எனது லட்சியம்.
சினிமாவுக்கு வந்த புதிதில் தமிழ், தெலுங்கில் பேச தெரியாது. இதனால் படப்பிடிப்புகளில் மிகவும் சிரமப்பட்டேன். மற்றவர்களை பேசச்சொல்லி நடித்தேன். அதன் பிறகு இரண்டு மொழிகளையும் தீவிரமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இப்போது எனக்கு தமிழ், தெலுங்கு நன்றாக தெரியும்.
நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். இது என்னுடைய பலம் ஆகும். நடந்த விஷயங்கள் பற்றி எப்போதும் நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பேன். இது பலவீனம். எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கிறது. தினமும் தவறாது உடற்பயிற்சிகள் செய்வேன். பணம் தேவையான அளவில்தான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பணம் வைத்து இருப்பது நிம்மதியை கெடுத்து விடும்.
அழகு என்பது பார்க்கும் கண்களில் இல்லை என்பது எனது கருத்து. அது மனதில் இருக்கிறது. நல்ல மனதுடன் வாழ்பவர்கள்தான் அழகானவர்கள். நான் கனவு காண்பது இல்லை. நடிகையாக இருக்கும் இந்த வாழ்க்கையே ஒரு கனவு போன்றதுதான். ஜோதிகாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடைய தீவிர ரசிகை. ரித்திக் ரோஷன். மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா, கரீனா கபூர் ஆகியோரையும் பிடிக்கும்.’’இவ்வாறு தமன்னா கூறினார்.