ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் 28-வது ஆண்டுவிழா சீதக்காதி அறக்கட்டளை தலைவர் ஆரிப்ரகுமான் புகாரி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
“கீழக்கரை என்றால் கீழ்பகுதி, கடைசிப் பகுதி என்று அர்த்தமல்ல. தமிழ்நாட்டின் கிழக்கு கரை என்று அர்த்தம். கிழக்கு என்றால் உதயம், உயர்வு என்று பொருள். வாழ்க்கையில் அழகு என்பது கல்விதான். வாழ்க்கையின் நெறி உள்பட அனைத்தையும் கற்றுக்கொடுப்பது கல்வி தான்.
அடுத்த நூற்றாண்டில் 2 வல்லரசுகள் தான் மிஞ்சும் என்கிறார்கள். அதிலும், சீனாவை விட இந்தியாதான் முன்னணியில் இருக்கும் என்று சொல்கிறார்கள். ஏனெனில், உலகநாடுகளிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியாவில்தான் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்கள்.
சாதி, மதம், மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் இவற்றால் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள் இப்போது எல்லா துறையிலும் முன்னேறிக்கொண்டே இருக்கின்றனர். மனித சமுதாயத்தின் இரு சிறகுகளாக ஆணும், பெண்ணும் உள்ளனர். இரட்டை சிறகால் பறந்தால்தான் சமுதாயம் உயர முடியும். ஆண்டுக்கு ஆண்டு தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். ஆண்கள் கரத்திற்கும், பெண்கள் கருத்திற்கும் சொந்தக்காரர்கள். பெண்களின் கருத்தும், அறிவும் நாட்டிற்கு தேவை.
ஒவ்வொரு பழமொழியிலும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. உலகில் உள்ள அனைத்து பழமொழிகளையும் தேடித்தேடி படித்தேன். தமிழர்களின் பழமொழி போல் வேறு எங்குமே இல்லை. “பாம்பின் கால் பாம்பறியும்“ என்று ஒரு பழமொழி. பாம்பிற்கு கால் ஏது என்று கேட்கலாம். கால் என்பது பாம்பு வசிக்கக் கூடிய வலை அல்லது துளை அல்லது புற்றை குறிக்கும். எத்தனை மைல் தூரம் சுற்றினாலும் பாம்பு தான் வசிக்கக் கூடிய துளையை பாம்பு அறியும் என்பதையே இந்த பழமொழி குறிக்கிறது.
“பெண் புத்தி, பின் புத்தி“ என்ற பழமொழி உள்ளது. பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து புத்தி சொல்லக்கூடியவள் பெண் என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும்.
நிகழ்கால பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு துணிவு இல்லாமல் சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலை உள்ளது. கணிதத்தேர்வு கடினமாக இருந்ததால் சிதம்பரத்தில் 2 சிறுமிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதுபோன்ற சின்ன காரணத்திற்காக உயிரை துறக்கக்கூடாது.
மாணவிகள் பெற்றோரையும், ஆசிரியரையும், பிறந்த மண்ணையும் ஒரு போதும் மறக்காதீர்கள்.“ இவ்வாறு வைரமுத்து பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து சாதி ஆணவக் கொலைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
“சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சாதியை ஒழிப்பதுடன் வர்க்க பேதங்களையும் ஒழிக்க வேண்டும். சாதிகளை ஒழிப்பதற்கான திட்டங்களை வரும் தேர்தல் அறிக்கையில் அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.