இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கிரிக்கெட் வாரியம் இவருக்கு ஆயுள்கால தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில் 33 வயதான ஸ்ரீசாந்தை களம் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு திருப்புனிதுரா தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் கேரளா வரும் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்ரீசாந்திடம் கேட்ட போது, தமது இறுதி முடிவை இன்று தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீசாந்த் கூறியதாவது:–
காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளும் என்னை தொடர்பு கொண்டுள்ளன. நான் எர்ணாகுளத்தில் இருந்து வந்தேன். ஆனால் எனக்கு திருப்புனிதுரா தொகுதியை தருவதாக அழைப்பு வந்துள்ளது.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும். நான் கிரிக்கெட் வீரரராக இருந்தேன். தற்போது பாலிவுட்டுக்கு சென்று உள்ளேன். எனவே நான் ஏன் அரசியலுக்கு செல்லக்கூடாது?
கடவுளின் விருப்பம் இருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆவேன். இவ்வாறு அவர் கூறினார்.