நடிகை ஷகிலா 1990 முதல் 2000 வரை மலையாள பட உலகை கலக்கினார். இவர் நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் வீழ்த்தி ஷகிலா படங்கள் பணத்தை அள்ளின. சிறு பட்ஜெட்டில் ஷகிலாவை வைத்து படங்கள் எடுத்த பல தயாரிப்பாளர்கள் கோடீஸ்வரர் ஆனார்கள்.
ஷகிலாவின் படங்களில் ஆபாசம் இருப்பதாகவும் அவற்றை பார்த்து இளைஞர்கள் கெடுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து அவருக்கு எதிராக சதி வலைகள் பின்னப்பட்டு மலையாள பட உலகில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஷகிலா நடித்த 23 படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. ஆபாச காட்சிகள் இருப்பதாக இவற்றுக்கு தணிக்கை சான்று கிடைக்கவில்லை. இது குறித்து ஷகிலா அளித்த பேட்டி வருமாறு:-
‘‘நான் தமிழில் பரத், நமீதா நடிக்கும் பொட்டு படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கன்னட படமொன்றிலும் நடிக்கிறேன். மலையாளத்தில் நான் நடித்துள்ள 23 படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. பல்வேறு காரணங்களை சொல்லி அந்த படங்களுக்கு தணிக்கை சான்று அளிக்க தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டைரக்டர் ஆக முடிவு செய்து இருந்தேன். ஆனால் அது கஷ்டமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டு விட்டேன். எனது வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி அளித்து இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் இந்த படம் தயாராகிறது. இந்த படத்தில் எனது வேடத்தில் நடிக்க பிபாசா பாசு, சன்னிலியோன் ஆகியோரிடம் பேசி வருகின்றனர். இவ்வாறு ஷகிலா கூறினார்.