ஹோலி என்றால் நமக்கு தெரிந்தது எல்லாம் நாயகன் படத்தின் அந்தி மழை மேகம் பாடலை போல அனைவரும் வண்ண, வண்ண சாயத்தை மற்றவர் மீது பூசிக் கொண்டும். சாயம் கரைத்த நீர் தொட்டிகளில் தள்ளிவிட்டும் தான் விளையாடுவார்கள் என கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஏன், கொண்டாடியும் இருப்போம்.
ஆனால், வீதிகளில், தெருக்களில் ஆண்களை ஓடவிட்டு துரத்தி, துரத்தி தடியால் அடித்து கொண்டாடப்படும் ஹோலியை நீங்கள் இதற்கு முன் அறிந்ததுண்டா? குளிர்பானம் என்ற பெயரில் போங்கு செய்து பாங்க் அளித்து அவர்களை தடுமாற வைத்து குதுகலமாகவும் ஒரு ஹோலி பண்டிகை கொண்டாடுகின்றனர் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தை சேர்ந்த மக்கள்.
அது ஏன்? இதற்கு பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதை பற்றி இனிக் காண்போம்….
பர்சானா மாவட்டம் – உத்திரபிரதேசத்தில் அமைந்திருக்கிறது பர்சானா எனும் மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து ஹோலி கொண்டாடும் வினோத முறை பின்பற்றப்படுகிறது.
வண்ணமையமான கொண்டாட்டம் – இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாட்டம் இந்த காலக்கட்டத்தில் பொதுவான நிகழ்வாக மாறிவிட்டது. வண்ண, வண்ண பொடிகளை மற்றவர் மீது தூவியும், சாயம் கலந்த நீரை ஊற்றியும் ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இது விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மாறுபட்ட கொண்டாட்டம் – ஆனால், வழக்கமான இந்த கொண்டாட்டங்களில் இருந்து மாறுப்பட்டு விளங்குகிறது பர்சானா மாவட்டத்தில் பெண்கள் கொண்டாடும் இந்த ஹோலி. இதை இவர்கள் லத்மார் ஹோலி என்று அழைக்கின்றனர்.
லத்தியடி – பர்சானா மாவட்டத்து பெண்கள் லத்மார் ஹோலி கொண்டாட்டத்தின் போது அந்த மாவட்டத்தின் ஆண்களை லத்தியால் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
முதல் நாள் – இந்த கொண்டாட்டம் பர்சானா மாவட்டத்தில் இருக்கின்ற ராதா ராணி கோவிலில் இருந்து தான் துவங்கப்படுகிறது. பிறகு இங்கிருந்து சாலை, தெருக்களில் வண்ணம் பூசி, தடியால் ஆண்களை துரத்தி அடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
பானம் – தண்டா / தண்டை என்ற குளிர்பானம் ஆண்களுக்கு பருக தரப்படுகிறது. சில சமயங்களில் அந்த பானத்தில் பாங்க் கலந்தும் கொடுத்துவிடுவார்கள். இதனால் போதை ஏற்பட்டு ஆண்கள் தடுமாறுவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக இது மன அழுத்தம் குறைக்க உதவுகிறது என சுற்றுவட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருமாத காலம் – பர்சானா மாவட்ட மக்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னரே இந்த லத்மார் ஹோலி கொண்டாட்டத்திற்கு தயாராக துவங்கிவிடுகிறார்கள். மாமியார்களும் கூட அவர்களது மருமகள்களுக்கு ஆரோக்கிய உணவை அளித்து ஊக்கமளிக்கின்றனர்.
பின்னணி கதை – லத்மார் ஹோலி பண்டிகையின் பின்னணியில் கிருஷ்ணரின் சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. கிருஷ்ணர் தனது மனைவியின் சொந்த ஊரான பர்சானாவிற்கு வந்த போது ராதா மற்றும் ராதையின் தோழிகள் மீது வண்ணப் பொடி தூவி சீண்டுகிறார்.
ராதாவின் பதிலடி – தங்கள் மீது வண்ணப் பொடி தூவி கிருஷ்ணன் சீண்டுவதை அடுத்து பெண்கள் கிருஷ்ணனை தடி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகின்றனர். இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் தான் இந்த லத்மார் ஹோலி பண்டிகை பர்சானா மாவட்டத்தில் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.
பர்சானா மக்கள் – இந்த வழக்கம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுவதற்காகவும் தான் இந்த லத்மார் ஹோலியை மறவாமால் கொண்டாடிவருகிறோம் என பர்சானா மாவட்டத்தின் மக்கள் தெரிவிக்கின்றனர்.