இஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். எதிர்பாராத விதமாக அவர் வேலை பார்த்த கம்பெனி மூடப்படுகிறது. இதனால் வேலையை இழக்கிறார். வீட்டுக்கு சென்றால் எங்கே தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி சென்னையில் வாடகைக்கு வீடெடுத்து வேறு வேலைத்தேடி வருகிறார்.
மடோனாவின் வீட்டருகே ரவுடி கும்பலிடம் வேலை செய்து வரும் விஜய் சேதுபதி வசிக்கிறார். இவர் பார் ஓனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவருக்கும் மடோனாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறியதா? விஜய் சேதுபதியின் பார் ஓனர் கனவு நிறைவேறியதா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் விஜய் சேதுபதி ‘சிரிப்பு ரவுடி’யாக வலம் வந்திருக்கிறார். ‘இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படம் பாணியில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு படம் இவருடைய நடிப்புத்திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டனா ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த மடோனா, இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கலாம்.
‘சூதுகவ்வும்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ‘மை டியர் டெஸ்பெரடோ’ என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். பெரிய அளவில் விஷயங்கள் இல்லாமல், எளிமையான கதை, திரைக்கதை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். காட்சிகளை யதார்த்தமாகவும், இயல்பாகவும் எடுத்திருப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் படத்தின் கதைக்கேற்ப பயணிக்கிறது. குறிப்பாக ‘ககக போ…’ பாடலும் அதனை படமாக்கிய விதமும் நடனமும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் ஒரு பலம்.
மொத்தத்தில் ‘காதலும் கடந்து போகும்’ வெற்றிநடை போடும்.