சமூக சேவகரான நாயகன் அஸ்வின் பெரிய இடத்து பையன். ஒரு இடத்தில் நாயகி ஷிவேதாவை சந்திக்கும் அஸ்வின், அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். நாயகியும் பச்சைக்கொடி காட்ட இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், அஸ்வினின் தந்தை ரவி ராகவேந்திரா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவரின் எதிர்ப்பை மீறி ஷிவேதாவை திருமணம் செய்துக் கொள்கிறார் அஸ்வின்.
ஷிவேதா பெற்றோரை இழந்தவர். குழந்தையாக இருக்கும் போதே இவரது அம்மா இறந்து விடுகிறார். அம்மா எழுதிய டைரியை படித்தே இவர் வளர்ந்திருக்கிறார். அந்த டைரியில் ஷிவேதாவின் அம்மா மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கும் விஷயம் தெரியவருகிறது.
அஸ்வினை திருமணம் செய்த பிறகு ஷிவேதாவிற்கு, ஒரு குறிப்பிட்ட கலர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இவரை அறியாமலேயே கனவில் வேறு உலகத்திற்கு செல்கிறார். அத்துடன் தூக்கத்தில் நடக்கவும் ஆரம்பிக்கிறார். ஷிவேதாவிற்குள் ஏற்படும் மாற்றத்தை அறிந்த அஸ்வின், அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார். ஷிவேதாவை குணப்படுத்த முடியாதும், அவருக்குள் வேறொரு சக்தி இருப்பதாகவும் டாக்டர் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவேதாவும் உணர ஆரம்பிக்கிறார். தன்னுடைய அம்மா போல், தானும் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டோமோ என்று பயப்படுகிறார். இந்த அமானுஷ்யங்களுக்கு மத்தியில் ஷிவேதாவை அஸ்வின் குணப்படுத்தினாரா? இவர்களின் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் சமூக சேவகராகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும் நடித்திருக்கிறார். மனைவிக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்டு வருந்தும் காட்சியில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
நாயகி ஷிவேதாவும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பயப்படுவதை அவரது முகபாவனைகளில் தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.
அஸ்வினுக்கு நண்பராகவும் அவருக்கு உதவுபவராகவும் நடித்திருக்கிறார் ஜே.டி.சக்ரவர்த்தி. இவரது கண்களுக்கு ஆவிகள் தெரியும்படியாகவும், ஆவிகளிடம் பேசும்படியான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
அஸ்வினுக்கு அப்பாவாக நடித்திருக்கும் ரவி ராகவேந்திரா, தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். மகன் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
புதிய இயக்குனர்கள் பல்வேறு கதைகளோடு திரைப்படத்தை இயக்க வருகிறார்கள். அந்தவரிசையில் மாறுபட்ட கதையாக நினைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷிவ் மோஹா. முதல் பாதியில் படத்தை பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டும்படியான காட்சிகளை வைத்து நகர்த்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் ரசிக்கலாம் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு இயக்குனராக சொல்லவரும் கருத்தை மற்றவர்களை புண்படுத்தாத அளவிற்கு இயக்க வேண்டும் என்பதை இயக்குனர் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் சி.ஜி. ஒர்க் எல்லாம் ரசிக்கும் படியாக உள்ளது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். பாபு குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘ஜீரோ’ மிரட்டல் குறைவு.