பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே பிரேத பரிசோதனை அறிக்கை, கலாபவன்மணியின் முக்கிய உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனை ஆகியவற்றின் முடிவுகள் பெறப்பட்டு உள்ளது. அதில் கலாபவன்மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் கலாபவன்மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கலாபவன்மணியின் மனைவி நிம்மி கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலாவுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார் அதில் தனது கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை விரிவாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த நிலையில் கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய பரிசோதனை கூடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் கலாபவன்மணியின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவியாக இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள்.