நாயகி சுவப்னாவின் அப்பா ஆதித்யா அரசியலில் பெரிய புள்ளியாக இருக்கிறார். இவருக்கு போட்டியாக அதே ஊரில் வசிக்கிறார் காதல் தண்டபாணி. இவருடைய மகன் நாயகன் ராம் சரவணன்.
காதல் தண்டபாணியும், ஆதித்யாவும் ஒரே கட்சியில் சமமான அந்தஸ்தில் இருக்கின்றனர். இருப்பினும், ஒருவருக்கொருவர் போட்டியாகவே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம்சரவணனும், சுவப்னாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விவகாரம் தண்டபாணிக்கும் தெரிந்தும், இவர்கள் காதல் ஒன்று சேர்ந்தால், இருவரது குடும்பத்துக்கும் உள்ள போட்டி நிலை மாறும் என்று அமைதியாக இருக்கிறார்.
இந்நிலையில், ஆதித்யாவின் அம்மா திடீரென்று ஒருநாள் இறந்துபோகிறார். அவரது சாவுக்கு வயது முதிர்ச்சிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது சாவு குறித்து மர்மமாகவே இருக்கிறது. அதனால், ஆதித்யா தனது அரசியல் பலத்தை வைத்து இந்த சாவுக்கு யார் காரணம் என்பதை அறிய தனியாக விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்கிறார்.
இதற்கிடையில், ராம்சரவணன்-தான்வியின் காதல் ஆதித்யாவுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த அவர் தனது மச்சானுடன் காதல் தண்டபாணியிடம் சென்று பிரச்சினை செய்கிறார். அப்போது, உணர்ச்சிவசப்படும் நாயகன் அவர்களை தீர்த்து கட்டிவிடுவதாக மிரட்டுகிறார்.
பின்னர், ஒருசில நாட்களிலேயே அமைச்சரின் மச்சானும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரும் ஆதித்யா வீட்டிலேயே சுடப்பட்டு இறக்கிறார்.
தொடர்ந்து, மூன்று மரணங்கள் ஒரே வீட்டில் நடந்ததால், இந்த கொலைகளுக்கு காரணம் என்னவென்று அறிய தீவிர விசாரணை நடக்கிறது. இறுதியில், இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராம்சரவணன் ஏற்கெனவே ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் முழு நேர கதாநாயகனாக நடித்துள்ளார். பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே ரகம்தான்.
படத்தில் சுவப்னா பானர்ஜி, தான்வி என இரண்டு நாயகிகள். இருவரில் சுவப்னாவுக்கு படத்தில் நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தான்விக்கு சிறு கதாபாத்திரம் என்றாலும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
காதல் தண்டபாணி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் இயக்குனர், தனக்கேற்றார்போல் மாஸ் காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார். ஆனால், அது மாஸாக தெரியவில்லை.
மேலும், இவர் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரு மேஜரையே கேட்டு செய்வது இவரது கதாபாத்திரத்திற்கு பலமில்லாதது போல் தெரிகிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்பதால், அவர்களிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை.
விடாயுதம் என்ற தலைப்பை வைத்து, திகில் கலந்த போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு திகில் கிளப்பியிருந்தார்கள். ஆனால், படத்தை பார்க்கும்போது எந்தவித திகிலும் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வு சரியில்லாததால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல், திகில் சம்பந்தமான காட்சிகளை சரியாக படமாக்காததும் படத்திற்கு பெரிய பலவீனம்.
கோபாலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு தெளிவாக இருக்கிறது. மிதுன் ஈஸ்வர் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘விடாயுதம்’ வீண் ஆயுதம்.