நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்புக்கு வர மறுத்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்று படஅதிபர் புகார் கூறினார்.
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பாயும் புலி, ஆறாது சினம் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது துருவா ஜோடியாக ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை ராகேஷ் இயக்குகிறார். மதியழகன், ரம்யா, பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பில் திரண்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா தத்தா மட்டும் வரவில்லை. இதனால் படப்பிடிப்பை நடத்தமுடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா கூறும்போது, ‘‘ஐஸ்வர்யா தத்தாவுக்கு கொடுக்க வேண்டிய முழு பணத்தையும் கொடுத்து விட்டோம். அந்த பணத்தை அவருடைய மானேஜர் ஷான் வாங்கிச்சென்றார்.
ஆனால் திட்டமிட்டபடி ஐஸ்வர்யா படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடத்துக்கான வாடகை, துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கான சம்பளம் என்று ரூ.3 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா தத்தா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்படும். போலீசிலும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.