நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு ஈரோட்டில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பதில் அளித்தார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் சிவாஜி கணேசனை வைத்து 3 படங்களை இயக்கி உள்ளேன். அவர் படத்தில் நடிக்கும்போது நடிகராக இருக்க மாட்டார். அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். புதிதாக நடிக்க வருபவர்கள் சிவாஜியின் படங்களை பார்த்து நடிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படத்தில் எனக்கு உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் முதல் -அமைச்சர் ஆகிவிட்டதால் அவரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரசிகர்களின் நாடித்துடிப்பை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் எம்.ஜி.ஆர். நடிக்கக்கூடியவர். களத்தூர் கண்ணம்மா படத்தில் 7-வது துணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் அறிமுகமான கமல், தனது நடிப்பை அப்போதே நிரூபித்து விட்டார்.
மேலும் சினிமா தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதால் கமல் ஒரு விஞ்ஞானி ஆவார்.
1973-ம் ஆண்டு கனிமுத்துபாபு என்ற படத்தின் மூலம் நான் இயக்குனரானேன். இதுவரை 70 படங்களை இயக்கி உள்ளேன். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பாயும் புலி, முரட்டுக்காளை உள்பட 25 படங்களும், கமலை வைத்து 10 படங்களும் இயக்கி உள்ளேன். எனது படங்களில் சில வெள்ளி விழா படமாகவும், 100 நாட்கள் தாண்டி ஓடிய படங்களாகவும் அமைந்தன. சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளது.
என்ன காரணத்திற்காக படம் ஓடவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பேன். அடுத்த படத்தில் அந்த தவறு வராமல் பார்த்துக்கொள்வேன்.
ஏ.வி.எம்.ஸ்டுடியோ சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பல்கலைக்கழகமாக விளங்குகிறது. ரஜினிகாந்த் தனது ஸ்டைல் மூலம் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சினிமா உலகில் கமல் விஞ்ஞானி என்றால் ரஜினி மெய்ஞானி ஆவார்.
முன்பெல்லாம் ஒரு படம் 60 பிரிண்டுகள் மட்டுமே போடப்படும். அந்த பிரிண்டுகள் தான் தமிழகம் முழுவதும் ஓடும். அதனால் அந்த காலத்தில் ஒரு படம் 100, 200 நாட்கள் எளிதாக ஓடியது. ஆனால் தற்போது ஒரு படம் 500 தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால் 200 நாட்கள் வசூலிக்கவேண்டிய தொகையை 2 நாட்களிலேயே தற்போது வசூலித்து விடுகின்றனர்.
நான் இயக்குனராக பணியாற்ற 15 வருடம் காத்திருந்தேன். சினிமா துறையின் அடித்தளத்தை கற்றுக்கொண்டால் இயக்குனராக நீண்ட காலம் நிலைத்து நிற்கலாம். சினமா துறைக்கு ஏராளமான தேவைகள் உள்ளன. எந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருகிறார்களோ அதன் அடிப்படையில் எங்களுடைய தேவைகள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று இருகைகளையும் மேலே உயர்த்தியபடி அவர் பதில் அளித்தார்.