பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். டி.வி. நிகழ்ச்சியான பிக்பாஸ்–சில் பங்கேற்ற அவர் அதன்பின் இந்தி திரையுலகில் கால் பதித்தார். ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சன்னி லியோன் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை பூஜாமிஸ்ரா மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆவார். அவதூறு வழக்கில் பூஜா மிஸ்ரா கூறியிருப்பதாவது:–
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானேன். அதன்பின்தான் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் நுழைந்தார்.
என்னை பற்றி அவதூறாக தகவல்களை ஊடகங்களில் பரப்புகிறார். என் மீதான விரோதம், பொறாமையால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எனது புகழுக்கு பொது மக்கள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனக்கு ரூ.70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே, அவர் மீது ஐ.பி.சி. 500 (அவதூறு) 120 (பி) சதி ஆகிய சட்டபிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நரேஷ் பட்டீல், விசாரணை கோடை விடுமுறைக்கு பின் நடக்கும் என கூறி தள்ளி வைத்தார். சன்னி லியோன் மீது தொடரப்பட்ட வழக்கால் இந்தி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.