பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அவரது காதலன் ராகுல் சிங்கின் வழக்கறிஞர் வழக்கில் இருந்து விலகியுள்ளார்.
மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா பானர்ஜி (வயது 24) இந்தி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் மும்பையில் தனது வீட்டில் கடந்த (1-தேதி) வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அவரது காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதியுஷா தற்கொலைக்கு காரணம் ராகுல் சிங் தான் என பிரதியுஷாவின் தோழிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுல் ராஜின் வழக்கறிஞர் நீரஜ் குப்தா இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார்.
“மனிதநேய அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து நான் விலகுகிறேன். தொடர்ந்து வாதாடக்கூடாது என்பதை உணர்ந்து விடுபட்டுள்ளேன். அதன்மூலம் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. ஒரு கட்சிக்காரர் சரியோ தவறோ, நல்லதோ கெட்டதோ அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். ஆனால், எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கு தொடர்பான விவரங்களை வெளியில் இருந்துதான் பெற்றுள்ளேன்” என்று வழக்கறிஞர் கூறுகிறார்.
ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்தபிறகு உங்கள் மனதை மாற்றிக்கொண்டீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த குப்தா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அதுபோன்ற விஷயங்களை கையாள வழக்கறிஞர் எப்போதும் ஆயத்தமாகவே இருப்பார், என்றார்.