சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
12-வது நாளான நேற்றைய விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதங்களை தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு குறித்து விசாரணை அமைப்பு முன்வைத்த கணக்குகள் மற்றும் அவை தொடர்பாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் அளிக்கப்பட்டது என்ன என்பது தொடர்பான பட்டியல் விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசு தரப்பில் தி.மு.க. ஆட்சியின்போது ஒவ்வொரு இனமும் உண்மையான மதிப்புக்கு அதிகமாகவே மதிப்பீடு செய்யப்பட்டது. உதாரணத்துக்கு போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத்தில் உள்ள வீடு ஆகியவற்றின் பராமரிப்பு பணிகள் தொடர்பான செலவினங்களின் மதிப்பீடும் அதிகரித்தே காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செலவினங்கள் தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரிசுப் பொருட்கள் தொடர்பாகவும் அனைத்தும் உரிய மதிப்புக்கு அதிகமாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.
சுதாகரன் திருமண செலவுகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அந்த திருமணத்துக்கான செலவில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பெண் வீட்டாரான நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரால் செய்யப்பட்டது. கட்சித் தொண்டர்களும் சில செலவுகளை தாங்களாக முன்வந்து ஏற்றுக்கொண்டனர்.
இதற்கு ரூ.6 கோடியே 49 லட்சம் செலவானது என்று விசாரணை அமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகப்படுத்தி சொல்லப்பட்ட தொகையாகும். திருமணத்துக்கான உண்மையான செலவு சுமார் ரூ.1.5 கோடி மட்டுமே. இதில் ஜெயலலிதா தரப்பில் ரூ.27 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. (சமையல் காண்டிராக்டர், திருமண மேடை மற்றும் பந்தல் அலங்காரம் உள்ளிட்ட செலவுகள் குறித்த செலவுகளை தனித்தனியாக படித்துக் காட்டினார்)
இந்த செலவுகள் குறித்து ஜெயலலிதா செலுத்திய வருமான வரி கணக்குகளின் போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பு இந்த ஆதாரங்களை ஏற்கவில்லை. அதேநேரத்தில் இந்த செலவினங்கள் குறித்து மிகவும் ஊதிப்பெருக்கிய நிலையில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு ஜெயலலிதா தரப்பு வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் வாதாடினார். இன்று (வியாழக்கிழமை) தன்னுடைய வாதங்களை முடித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.