சோமாலியாவில் சக ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப்பிற்கு உதவிய முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைநகர் மொஹாடிஷுவில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கென்யாவிலிருந்து 2014 இல் சோமாலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட ஹசன் ஹனாஃபி சோமாலியாவை சேர்ந்த 5 ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு பிரதான சூத்திரதாரியாக இருந்தார் என்ற குற்றம் நிருபிக்கப்பட்டது.
சோமாலியாவில் நன்கு அறியப்பட்ட ஒலிபரப்பாளரான அவர் பின்னர் அல் ஷபாப்புடன் இணைந்திருந்தார்.
ஊடகவியலாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலியா உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அங்கு 25 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அனேகமான கொலைகளை அல் ஷபாப் மேற்கொண்டுள்ளது.