ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சவுந்தர்யா. காதலா காதலா, பொன்னுமணி, சேனாதிபதி, இவன், சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
இந்த நிலையில் 2004-ல் ஹெலிகாப்டர் விபத்தில் சவுந்தர்யா திடீர் மரணம் அடைந்தார். அதன் பிறகு அவரது சொத்துகள் போலி தஸ்தாவேஜுகள் மூலம் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. சவுந்தர்யா பெங்களூருவை சேர்ந்தவர். 1999-ல் அங்குள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்று இருந்தார். அந்த மனை சவுந்தர்யா பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
சவுந்தர்யா இறந்த பிறகு 2012-ல் அந்த வீட்டு மனையை போலி தஸ்தாவேஜுகள் மூலம் அவரது மைத்துனி பாக்யலட்சுமி என்பவர் பெயருக்கு மாற்றி விட்டனர். சவுந்தர்யாவுக்கான ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டனர். இதற்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அதிகாரியாக இருந்த தயானந்த் மற்றும் மேலும் 2 பேர் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு லோக்ஆயத்தா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க பாக்யலட்சுமியும், தயானந்தும் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். நீதிபதி இதனை விசாரித்து இருவரும் குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைதொடர்ந்து பாக்யலட்சுமி, தயானந்த் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இந்த வழக்கு கன்னட திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.